General10 June 2026

பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்து பிரதமர் அதிரடி உத்தரவு!

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் தற்போதைய நிலை குறித்த விரிவான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்குப் பிரதமர் ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (09) நடைபெற்ற பெருந்தோட்டப் பாடசாலைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகள், பாடசாலைகளின் மீள்கட்டமைப்பு, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் இடமாற்றங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் நிலை மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்டு மாற்றுப் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட மாணவர்களின் கல்விச் சூழல் குறித்து துல்லியமான தரவுகள் அவசியம் என பிரதமர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க, தமிழ் மொழி பேசும் ஆசிரியர்களைத் தனியாகப் பயிற்றுவித்து ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள வெற்றிடங்களில் 50 சதவீதமானவை இந்த சுற்றில் நிரப்பப்படும்.

புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் ஐந்து வருடங்கள் கடமையாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டப் பாடசாலை மாணவர்களுக்குத் தடையற்ற 13 வருடக் கல்வியை வழங்குவதிலும், தமிழ் மொழி மூலமான தொழிற்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதிலும் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகப் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes