General09 June 2026

பிரித்தானியாவின் சவுத்ஹம்ப்டன் துறைமுகத்தில் பாரிய தீ விபத்து: அதி சொகுசு வாகனங்கள் தீக்கிரை!

பிரித்தானியாவின் சவுத்ஹம்ப்டன் துறைமுக வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், 1.2 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக மதிப்புள்ள 33 அதி சொகுசு ஹைப்ரிட் ரக SUV ரக வாகனங்கள் முற்றாக அழிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துறைமுகத்தின் வாகனக் களஞ்சியப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'ஜேக்கு இ5' (Jaecoo E5) வகை வாகனங்களிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

தீ விபத்தின் போது பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த 10 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சிறப்புப் பிரிவினர், நீண்ட போராட்டத்திற்கு மத்தியிலேயே தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்தத் தீ விபத்தினால் எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்துகளோ ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், இது குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes