General09 June 2026

வங்கிக் கடனுக்காக மாற்றப்பட்ட சொத்து: மகனுக்கு எதிரான 30 வருட சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி!

வங்கிக் கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் மகனின் பெயருக்கு மாற்றப்பட்ட குடியிருப்புச் சொத்து ஒன்றின் உண்மையான உரிமையாளர் தாய் என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம் தனது மகனுக்கு எதிராக தாய் நடத்தி வந்த 30 வருட கால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

மிரிஹான பகுதியில் உள்ள தனது வீட்டை, 1987ஆம் ஆண்டு வங்கிக் கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்காக மாத்திரம் தனது மகனின் பெயருக்கு இந்தத் தாய் மாற்றியிருந்தார்.

எனினும், கடனை அடைத்த பின்னர் அதனைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே சொத்து மாற்றப்பட்டது என்றும், அதன் முழுமையான உரிமையை மகனுக்கு வழங்கும் நோக்கம் தனக்கு இருக்கவில்லை என்றும் தாய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தான் அதனை 125,000 ரூபாவிற்கு விலைக்கு வாங்கியதாக மகன் வாதிட்டிருந்தார்.

இது தொடர்பான சட்டப் போராட்டம் 1997ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கல்கிஸ்சை மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றம் என்பன தாய்க்கு சாதகமாக தீர்ப்பளித்தன.

இதனை எதிர்த்து மகன் தரப்பால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபயசேகர ஆகிய மூவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம், கீழ் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை ஏகமனதாக உறுதிசெய்து மகனின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது.

நம்பிக்கைப் பொறுப்பு கட்டளைச் சட்டத்தின் 83ஆம் பிரிவின் கீழ், ஒரு சொத்து மாற்றப்படும் போதுள்ள சூழ்நிலைகளைக் கருதி, அதன் உண்மையான உரிமை யாருக்குரியது என்பதை நீதிமன்றம் தீர்மானிக்க முடியும் என சுட்டிக்காட்டிய நீதியரசர்கள், தாய் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வாங்கிய ஒரேயொரு குடியிருப்பு இதுவென்பதாலும், பெறப்பட்ட கடன் வீட்டை விரிவுபடுத்தவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதாலும் இதன் உண்மையான உரிமையாளர் தாயே எனத் தீர்ப்பளித்தனர்.
Related recommendation
Hiru TV News | Programmes