General09 June 2026

"கொழும்பில் மோசமான நிலையில் உள்ள 27 மாடிக் குடியிருப்பு தொகுதிகள்!"

கொழும்பில் மோசமான நிலையில் 27 மாடிக்குடியிருப்பு தொகுதிகள் உள்ளதாக நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் , கொழும்பில் முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்பு வீடமைப்புத் திட்டம் இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான வீட்டுத் திட்டங்கள் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான விசேட விவாதமொன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எழுப்பிய கேள்விகளுக்கு, பதிலளித்த போதே பிரதி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, மஹரகம பகுதியில் சீன நிதியுதவியின்கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் தொகுதியில் மக்களைக் குடியேற்றுவதற்கான காலக்கெடு குறித்துக் கேள்வி எழுப்பினார். அங்கு குடியேற்றப்பட வேண்டிய குடும்பங்களின் எண்ணிக்கையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"கடந்த காலங்களில் முறையான திட்டமிடல் இன்றி மக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியேற்றப்பட்டதால், அடிப்படை வசதிகள் (மின்தூக்கி வசதிகள் போன்றவை) இன்றி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

உலக வங்கி அல்லது ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களின் நிதியுதவியுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது மட்டுமே 'சுயவிருப்பற்ற மீள்குடியேற்றக் கொள்கை' பின்பற்றப்படுகிறது. ஆனால் ஏனைய நிதி ஆதாரங்களின் கீழ் திட்டங்கள் நடக்கும்போது இக்கொள்கை மதிக்கப்படுவதில்லை.

எனவே, இந்த ஒழுங்கற்ற நிலையை மாற்றி, மக்களின் சமூகப் பாதுகாப்பு, பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், இந்த 'சுயவிருப்பற்ற மீள்குடியேற்றக் கொள்கையை' இலங்கையில் ஒரு கட்டாயச் சட்டமாக மாற்ற வேண்டும். இதற்கு எமது முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருக்கிறோம்." என அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துக்களுக்குப் பதிலளித்த நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர
கொழும்பு மாவட்டத்தில் உள்ள 27 அடுக்குமாடி குடியிருப்புகள் தற்போது மக்கள் வாழ்வதற்குப் தகுதியற்ற நரகம்போன்ற சூழலாக மாறியுள்ளதை ஏற்றுக்கொண்டார்.

தற்போதைய அரசாங்கம் அந்த 27 வீட்டுத் தொகுதிகளையும் மறுசீரமைத்து, மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

"மஹரகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள தகுதியான குடும்பங்கள் அனைத்தும், இந்த வருட இறுதிக்குள் சீன நிதியுதவி வீட்டுத் தொகுதியில் மீள்குடியேற்றப்படுவார்கள்.

அத்துடன், இந்த வருடத்திற்குள் 2 அடுக்குமாடி குடியிருப்புகளும், அடுத்த இரண்டு வருடங்களுக்குள் மேலும் 11 அடுக்குமாடி குடியிருப்புகளும் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, 7,000 க்கும் அதிகமான மக்கள் குடியேற்றப்படவுள்ளனர்.

மக்களின் வாழ்வாதாரம், பிள்ளைகளின் கல்வி மற்றும் சமூகத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த மீள்குடியேற்றங்கள் அமையும்.

எதிர்காலத்தில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான வீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, பின்பற்றப்பட வேண்டிய கட்டாய அடிப்படை அளவுகோல்களை நகர்ப்புற வளர்ச்சி அதிகாரசபை (UDA) ஊடாக புதிய கொள்கையாக வகுத்து வருகிறோம். அது விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்." என உறுதியளித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes