General09 June 2026

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு புதிய காணியுடன் 50 இலட்சம் ரூபா வீட்டுத் திட்டம்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு புதிய காணியுடன் 50 இலட்சம் ரூபா வீட்டுத் திட்டம் வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெருந்தோட்ட மக்களின் வீடமைப்பு மற்றும் காணி உரிமைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட விசேட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

லயன் குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு வீடோ அல்லது காணியோ சொந்தமாக இல்லாத போதிலும், காணி அல்லது அனுமதிப்பத்திரக் காணி வைத்திருந்த ஏனைய மக்களுக்கு நிகராக இவர்களுக்கும் 50 இலட்சம் ரூபாய் முழுமையான நட்டஈடு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த 2026 ஏப்ரல் 6 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை இணைந்து எடுத்த விசேட கொள்கை ரீதியான தீர்மானத்தின் அடிப்படையில் மலையக மக்களுக்கு இந்த விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாதிக்கப்பட்ட மலையகக் குடும்பங்களுக்கு 650 சதுர அடி பரப்பளவைக் கொண்ட புதிய வீடொன்றை அமைப்பதற்காக 50 இலட்சம் ரூபாயும், அதற்காக அரசாங்கத்தின் மூலம் தலா 10 பேர்ச் காணியும் இலவசமாக வழங்கப்படும்.

பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சில லயன் குடியிருப்புகள் 150 வருடங்களுக்கும் மேல் பழமையானவை. அவை முழுமையாகச் சேதமடையாவிட்டாலும், வாழத் தகுதியற்றவை என இடர் முகாமைத்துவ குழுவினால் சான்றளிக்கப்பட்டால், அவற்றை பழுதுபார்ப்பதற்குப் பதிலாக புதிய வீடு கட்டுவதற்காக நேரடியாக 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்திப் பொறுப்பு நிதியம் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக மதிப்பீடு செய்யப்பட்டு 5 இலட்சம் முதல் 25 இலட்சம் ரூபாய் வரை கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes