General09 June 2026

டிஜிட்டலாகும் தொடருந்து சேவை: அரச பணியாளர்களுக்கு புதிய வசதி!

தேசிய டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் மற்றுமொரு கட்டமாக, அரச அதிகாரிகளுக்கு சலுகை விலையிலான தொடருந்து பருவச்சீட்டுகளை (Season Tickets) வழங்குவதற்கான புதிய இணையவழி முறைமை இன்று (9) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்த புதிய திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புதிய திட்டத்தின்படி, அரச நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சலுகை விலையிலான பருவச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக, தொடருந்து திணைக்களத்தின் டிஜிட்டல் தளத்தில் முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இன்றைய ஆரம்ப விழாவில், 35 அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இந்த பதிவுச் செயல்பாட்டில் கலந்துகொண்டனர்.

சலுகை விலை தொடருந்து பருவச்சீட்டுகளைப் பெற விரும்பும் அரச அதிகாரிகள், தத்தமது நிறுவனங்களின் அது தொடர்பான விடயத்துக்கு பொறுப்பான உத்தியோகத்தரின் ஒருங்கிணைப்புடன், 'பிரவேஷ' (Pravesha) கைபேசி செயலி (Mobile App) மூலமாகவோ அல்லது www.pravesha.lk என்ற இணையத்தளம் ஊடாகவோ பதிவு செய்துகொள்ள முடியும்.

இவ்வாறு பதிவு செய்துகொள்ளும் அதிகாரிகள், எதிர்வரும் ஜூலை மாதத்துக்கான பருவச்சீட்டுகளுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, இலங்கை தொடருந்து திணைக்களம் மற்றும் மேல் கொழும்பு தொடருந்து திட்டம் (Greater Colombo Railway Project) ஆகியன இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

இந்த வேலைத்திட்டமானது நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல் இலக்கை அடைவதற்கு வழிவகுப்பதுடன், தொடருந்து சேவையின் வினைத்திறன், சேவையின் தரம் மற்றும் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் என அதிகாரிகள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes