General09 June 2026

பெண்ணைத் தாக்கிய விவகாரம்: தேசிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உப தவிசாளர் , மகனுக்கு பிணை

பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் அவரது மகன் ஆகியோரை தலா 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல பசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பசறை, எல்டப் பகுதியில் கடந்த மாதம் 30ஆம் திகதி இரவு இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்படி, 51 வயதுடைய தேசிய மக்கள் சக்தியின் பசறை பிரதேச சபை உப தவிசாளர் சின்னையா நவராஜ் மற்றும் அவரது 24 வயதுடைய மகன் ஆகியோர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது காயமடைந்த உப தவிசாளரும் அவரது மனைவியும் அன்றைய தினம் இரவே பசறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

பின்னர் உப தவிசாளர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் குறித்து இரு தரப்பிலிருந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், பசறை காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பசறைகாவல்துறையினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes