General09 June 2026

"ஜே.வி.பி-யின் தேர்தல் மேடைப் பாடல்களுக்கு ஒரு நீதி, கிளிநொச்சி இளைஞருக்கு ஒரு நீதியா?"

மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் மேடைப்பாடல்களுக்கு ஒரு நீதி கிளிநொச்சி இளைஞருக்கு ஒரு நீதி என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) தன்னிச்சையாகப் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியினர் வட பகுதியில் பிரசாரத்திற்காக விடுதலை புலிகளின் சித்தாந்தப் பாடல்களைப் பயன்படுத்தியிருந்ததாக ஊடகங்கள் அறிக்கை செய்திருந்ததை நினைவு கூர்ந்தார்.

அந்தப் பாடல்களைப் பகிர்ந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக இருக்கும் போது, கிளிநொச்சியில் ராப் (Rap) பாடல் பாடிய இளைஞன் மட்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் என்றும், இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியது யார் என்றும் அவர் சவால் விடுத்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் இராணுவத்தினர் தொடர்பான குற்றப் புலனாய்வு விசாரணைகளை அரசாங்கம் தங்களது அரசியல் மேடைத் தலைப்புகளாக மாற்றி அரசியலாக்கக் கூடாது எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes