General09 June 2026

ஆசியாவின் மோசடி வலையமைப்புகளுக்கு இலங்கை ஒரு புதிய தளமாக உருவெடுத்து வருகிறது

கம்போடியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் கடுமையான சோதனைகள் காரணமாக, சர்வதேச இணையவழி மோசடி கும்பல்கள் இலங்கையிலுள்ள கடற்கரை விடுதிகள் மற்றும் அலுவலகக் கட்டடங்களை நோக்கி தங்களது செயல்பாடுகளை மாற்றி வருவதாக புலனாய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்த குற்றவியல் தொழிலின் அடுத்த கட்டமாக இது பார்க்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள விசா இல்லாத பயண வசதி, தேவையான கட்டிட இடவசதிகள், ஒப்பீட்டளவில் வலுவான தொலைத்தொடர்பு வலையமைப்புகள் மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட முறைசாரா பணப்பரிமாற்ற அமைப்பு (உண்டியல் முறைமை) போன்ற காரணிகளே, மோசடி கும்பல்களுக்கு இலங்கை ஒரு சாதகமான நாடாக மாறுவதற்குக் காரணம் என்று புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த புதிய இணையவழி குற்றப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் மேற்கு கடற்கரைப் பகுதிகள் மற்றும் தலைநகர் கொழும்பில் 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"இந்த விவகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை, குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் மத்திய வங்கி ஆகியன ஒன்றிணைந்து கூட்டு முயற்சியாக செயல்பட்டு வருகின்றன" என உதவி காவல்துறை அத்தியட்சகர் காவல்துறை பேச்சாளர் பிரெட்ரிக் வூட்லர் தெரிவித்துள்ளார்.

அதிநவீன தொழில்நுட்பத்துடன் வேகமாக இயங்கும் இந்த மோசடி கும்பல்களைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு மிகக் குறுகிய கால அவகாசமே உள்ளதாக அவதானிப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.

"இலங்கையில் சட்டங்களை அமுல்படுத்துவதில் சில சிக்கல்கள் உள்ளன. நாம் இந்த நிறுவனங்களுக்கு எதிராக போதிய நெருக்குதல்களைக் கொடுப்பதில்லை; அவர்கள் வெறுமனே சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தியே இங்கு தங்கியிருக்கிறார்கள்." என இலங்கையின் புலனாய்வு அறிக்கைக்கான மையத்தின் பணிப்பாளர் தில்ருக்ஷி ஹந்துந்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மேற்கு கடற்கரைப் பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் காவல்துறை நடத்திய சோதனையில், இணையவழி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் கண்டறியப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, கொழும்புக்கு அருகிலுள்ள பல மாடி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 120 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையின் நெருக்குதல்கள் அதிகரித்து வருவதால், இந்த கும்பல்கள் பெரிய வளாகங்களில் இருந்து, விரைவாக வாடகைக்கு எடுத்துவிட்டு உடனே வெளியேறக்கூடிய விருந்தகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலக இடங்களுக்கு தங்களது உத்திகளை மாற்றி வருகின்றன.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க நாடாளுமன்றக் குழு வெளியிட்ட அறிக்கையொன்றில், பலவீனமான சட்ட அமுலாக்கத்தையும் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பையும் கொண்ட "நெறிமுறை அழுத்தங்களுக்கு" உள்ளாகும் நாடுகளை நோக்கி இந்த மோசடி வலையமைப்புகள் நகர்வதாக எச்சரித்திருந்தது.

இலங்கையில் உள்ள இத்தகைய சந்தேகத்திற்கிடமான மையங்களில், தென்கிழக்கு ஆசிய மோசடி மையங்களில் இருந்து தப்பியவர்கள் பணியாற்றக்கூடும் என்று மோசடி புலனாய்வாளர்கள் கருதுகின்றனர். மாற்று வேலை வாய்ப்புகள் இல்லாததால், அவர்கள் தங்களது முந்தைய அனுபவங்களை இங்கு பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு இராச்சியம், திமோர்-லெஸ்தே, பிஜி மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளைத் தாண்டி, தற்போது இலங்கையிலும் இந்த மோசடிகள் பரவி வருவது, சர்வதேச கடத்தல் கும்பல்கள் உலகளவில் விரிவடைந்து வருவதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

-Bloomberg -
Related recommendation
Hiru TV News | Programmes