ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் 15 வயது இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தைக் கண்டு, அவர் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவரா என இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் நகைச்சுவையாகக் கலந்துரையாடியுள்ளனர்.
வைபவ் சூர்யவன்ஷி இவ்வளவு ஆறு ஓட்டங்களை விளாசுவதைப் பார்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் ஆய்வாளர் நோமன் நியாஸ், "அவரது உடலில் AI சிப் பொருத்தப்பட்டுள்ளது" எனத் நகைச்சுவையாக கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த வைபவ், "இந்த சிப்பை கடவுள் தான் பொருத்தினார்" என நகைச்சுவையாகக் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜோஸ் பட்லரும் இது போன்ற ஒரு கருத்தை குறிப்பிட்டுள்ளார்.
நான் ஜோப்ரா ஆர்ச்சருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி, 'இவன் AI மூலம் உருவாக்கப்பட்டவனா? ஈலோன் மாஸ்க் ஏதும் வித்தை காட்டும் துடுப்பாட்ட வீரரை உருவாக்கிவிட்டாரா?' என்று கேட்டேன். ஆனால் அவர் உண்மையானவர், அவரது ஆட்டத்தைப் பார்ப்பது மிகவும் பிரமிப்பாக உள்ளது. இந்த கோடையில் அவர் இங்கிலாந்துக்கு விளையாட வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான விடயத்தையும் பட்லர் நினைவு கூர்ந்தார்
சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜேம்ஸ் பிராங்க்ளின், அணித்தலைவர் பெட் கம்மின்ஸிடம், "நீங்கள் இன்று பும்ரா மற்றும் ஹேசில்வுட் இருக்கும் ஒரு விசேட கிளப்பில் இணைந்துள்ளீர்கள்" எனக் கூறியுள்ளார்.
அந்த கிளப் என்னவென்றால், வைபவ் சூர்யவன்ஷி தான் எதிர்கொண்ட முதலாவது பந்திலேயே பும்ரா, ஹேசில்வுட் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகிய மூன்று ஜாம்பவான்களின் பந்து வீச்சுக்கும் ஆறு ஓட்டங்களை விளாசியுள்ளார்.
ஒரு 15 வயது சிறுவனிடம் பயிற்சியாளர் 'இவர்கள் சிறந்த பந்துவீச்சாளர்கள், ஒரு பந்தை பார்த்து விளையாடு' என்று சொல்லியிருப்பார். ஆனால் அவர் மூன்று ஜாம்பவான்களின் முதல் பந்தையுமே மைதானத்திற்கு வெளியே அனுப்பியுள்ளார். இது நம்பமுடியாத ஒன்று, என பட்லர் பாராட்டியுள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி கடந்த 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அதிவேக சதம் விளாசி சாதனை படைத்திருந்ததுடன், இந்த தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிராகவும் சதம் விளாசி அசத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.









