டெல்லி கேப்பிட்டல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன், 15 வயதேயான வைபவ் சூர்யவன்ஷியை வீழ்த்திய பின் வெளிப்படுத்திய ஆக்ரோஷமான கொண்டாட்டம் தற்போது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஜேமிசன் வீசிய துல்லியமான இன்ஸ்விங்கிங் யார்க்கர் பந்து, சூர்யவன்ஷியின் துடுப்பாட்ட மட்டையின் நுனியில் பட்டு ஸ்டம்புகளைப் பதம் பார்த்தது.
இதற்கு முந்திய பந்தில் சூர்யவன்ஷி ஒரு பவுண்டரி விளாசியிருந்த நிலையில், அடுத்த பந்திலேயே அவரை வீழ்த்திய ஜேமிசன் மிகுந்த உற்சாகத்துடன் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.
உலக சாதனைகளை எதிர்நோக்கிக் களமிறங்கிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு, இந்த ஆட்டமிழப்பு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 100 சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற கீரன் பொல்லார்டின் சாதனையை முறியடிக்கவும், 20 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 100 சிக்ஸர்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெறவும் இன்னும் ஒரு சிக்ஸர் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ஆட்டமிழந்தார்.
தற்போதைய ஐபிஎல் தொடரில் 237.64 என்ற மலைக்க வைக்கும் ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிவரும் சூர்யவன்ஷியின் விக்கெட்டை வீழ்த்தியது டெல்லி அணிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இருப்பினும் துல்லியமான யோர்க்கர் மூலம் சூர்யவன்ஷியின் விக்கெட்டை வீழ்த்திய ஜேமிசன், இளம் வீரருக்கு முன்னால் ஆக்ரோஷமாக கைதட்டி வழிஅனுப்பு (Send-off) கொடுத்த விதம் சமூக வலைதளங்களில் இரசிகர்களை இரு பிரிவாகப் பிரித்துள்ளது.
ஒரு தரப்பினர் இது தொழில்முறை கிரிக்கெட் என்றும், இதில் வயதுக்கு இடமில்லை என்றும் ஜேமிசனை ஆதரிக்கின்றனர்.
ஆனால், மற்றொரு தரப்பினர் 31 வயது சர்வதேச வீரர் ஒருவர், பாதி வயது கூட இல்லாத சிறுவனிடம் இவ்வளவு ஆக்ரோஷத்தைக் காட்டியது தேவையற்றது என விமர்சித்து வருகின்றனர்.
ஜேமிசன் இவ்வளவு ஆக்ரோஷமாகப் பிரதிபலித்ததே, இளம் வீரரான சூர்யவன்ஷி ஆட்டத்தில் ஏற்படுத்தியிருக்கும் பெரும் தாக்கத்தையும் டெல்லி பவுலர்களுக்கு இருந்த பயத்தையுமே காட்டுகிறது எனச் சில இரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம், நவீன கிரிக்கெட்டில் வீரர்களின் ஆக்ரோஷம் மற்றும் களத்தில் நிலவ வேண்டிய நாகரிகமான நடத்தை குறித்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை காரசாரமாக முன்னெடுத்துள்ளது.









