இந்தியாவின் கல்வி சபை தேர்வுகள் மற்றும் மருத்துவப் பரீட்சை முறைகேடுகளுக்கு எதிராக, புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் திரண்டு பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களாக உள்ள நிலையில், தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பரீட்சை வினாத்தாள் கசிவுகள் மற்றும் கல்வி சபை குளறுபடிகள் அவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில் இந்திய தலைமை நீதியரசர் இளைஞர்களை 'கரப்பான்பூச்சிகளுடன்' ஒப்பிட்டுப் பேசியதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் கல்வி பயின்ற அபிஜீத் திப்கே (Abhijeet Dipke) என்பவர் சமூக வலைத்தளத்தில் ஆரம்பித்த 'காக்ரோச் ஜனதா கட்சி' (CJP) என்ற பக்கம், தற்போது ஒரு பிரம்மாண்ட அரசியல் இயக்கமாக மாறியுள்ளது.
அபிஜீத் திப்கே விடுத்த அழைப்பினை ஏற்று, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புதுடெல்லியில் குவிந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது மாணவனான சௌரவ் குஷ்வஹா தெரிவிக்கையில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தங்களின் எதிர்காலம் குறித்து அலட்சியமாக இருப்பதாலேயே இந்த போராட்டத்தில் இணைந்ததாக" குறிப்பிட்டார்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முகமூடிகளை அணிந்தும், கைகளில் புத்தகங்கள் மற்றும் மலர்களை ஏந்தியும் அமைதி வழியில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
போராட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய அபிஜீத் திப்கே, "இந்திய இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் மட்டும்தான் பதிவிடுவார்கள் என்று நினைப்பவர்கள், இங்கு வந்து பார்க்க வேண்டும். கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதேவேளை, மாணவர்களின் இந்த பாரிய போராட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.









