அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, மக்களின் உடற்பயிற்சி குறைகிறது. இது, அவர்களின் நீண்டகால ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்தநிலையில், வெப்பமான காலநிலையில் சுறுசுறுப்பாக இருப்பது சவாலானதாக மாறியுள்ளது என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெற்ற 2026 உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற வீரர்களுக்கு, ஒவ்வொரு பாதி ஆட்டத்தின் 22-வது நிமிடத்திலும் கூடுதல் நீரேற்ற இடைவேளைகள் வழங்கப்பட்டமைக்கு, இந்த வெப்பநிலையே முக்கிய காரணமாகும்.
அத்துடன், சக்திவாய்ந்த எல் நினோ வானிலை அமைப்பின் காரணமாக சாதனை அளவிலான வெப்பநிலை பதிவாகக்கூடும் என்பதால் உடற்பயிற்சி செய்வது மேலும் கடினமாகலாம்.
கடுமையான வெப்பத்தில் ஓட்டப்பயிற்சி அல்லது கால்பந்து போட்டிகளில் ஈடுபடுவது வெப்பத்தாக்க அபாயத்தை ஏற்படுத்தும்.
"வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது நடைப்பயிற்சி, ஈருருளி ஓட்டுதல், வெளிப்புற உடற்பயிற்சிகள் போன்ற அன்றாட வழக்கங்கள் கூட அதிக சிரமமானதாக மாறுகின்றன."
இந்தநிலையில், காலநிலை மாற்றத்தால் மக்கள் வெப்பத்தில் குறைவாக நடமாடுவதன் விளைவாக, 2050-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு சுமார் 470,000 முதல் 700,000 பேர் வரை அகால மரணம் அடையக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.
எனவே, காலை அல்லது மாலை நேரங்களில் உடற்பயிற்சி செய்வது சிறந்தது என்று விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.
வெப்பமான நாட்களில் குறைந்த நேரம் உடற்பயிற்சி செய்வதோடு, அதிக இடைவெளிகளை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உடற்பயிற்சிக்கு இடைவேளை எடுக்கும்போது குளிரூட்டப்பட்ட அறை, குளிர்ந்த நீர் அல்லது மின்விசிறி வசதி கொண்ட நிழலான சூழலில் நேரத்தைச் செலவிடுவது சிறந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவதை விட, கைகள் மற்றும் முன்கைகளைக் குளிர்ந்த நீரில் மூழ்க வைப்பது அல்லது உடலின் மீது தண்ணீரை ஊற்றி அதை ஆவியாக விடுவது உடலைத் திறம்படக் குளிர்விக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.








