சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள டோங்ஹூ ஆய்வகத்தில் 1 கிலோமீட்டர் நீளமுள்ள சோதனைப் பாதையில் நடத்தப்பட்ட ஆய்வில், 1.1 தொன் எடையுள்ள சோதனை அதிவேக தொடருந்து (Maglev Train) முடுக்கப்பட்டு, வெறும் 5.3 வினாடிகளில் மணித்தியாலத்திற்கு 0 முதல் 800 கிலோமீட்டர் வேகத்தை எட்டி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.
இந்தச் சோதனையில் தொடருந்து அதிவேகத்தை எட்டியது மட்டுமன்றி, மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் தொழில் நுட்பத்தின் மூலம் சுமார் 200 மீட்டர் தூரத்திற்குள் சீராக நிறுத்தப்பட்டு அதன் பாதுகாப்புத் தன்மையும் உறுதிசெய்யப்பட்டது.
கடந்த 6 மாதங்களில் இந்தச் சோதனை தொடருந்து தனது சொந்த சாதனையை முறியடிப்பது இது மூன்றாவது முறையாகும்.
2025 ஜூன் மாதம் 7 வினாடிகளில் 650 கி.மீ/மணி வேகத்தை எட்டி சாதனை படைத்த நிலையில், தொடர் ஆய்வுகள் மூலம் நேரத்தைக் குறைத்து தற்போது 800 கி.மீ/மணி வேகத்தை எட்டியுள்ளது.
இது மனிதர்களை ஏற்றிச் செல்வதற்கான தொடருந்து அல்ல. மின்-காந்த விசை செலுத்துகை, அதிவேக மிதப்புக்கட்டுப்பாடு மற்றும் அவசரகால பிரேக்கிங் ஆகிய உயர்தொழில்நுட்பங்களை சோதிக்கவே இது பயன்படுத்தப்படுகிறது.
இந்த தொழில்நுட்ப கொள்கைகள் மூலம் எதிர்வரும் காலத்தில் ரொக்கெட்டுகள் மற்றும் போர் வானூர்திகளை விண்ணில் ஏவும் அமைப்புகள் (launch systems) மற்றும் குறைந்த அழுத்த குழாய் (vacuum tube) வழியிலான அதிவேகப் போக்குவரத்து அமைப்புகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









