ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் மாயமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிபா மாகாணத்தின் சில பகுதிகளில் 24 மணி நேரத்திற்குள் 360 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக பல வீதிகள் மற்றும் தொடருந்து பாதைகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல வீடுகளுக்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த நால்வரில் வெள்ளத்தில் மூழ்கிய வாகனத்திற்குள் சிக்கிய ஒருவரும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மீட்புப் பணிகளுக்காக ஜப்பான் இராணுவத்தினரும் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தான் இதற்கு முன்னர் பல பேரிடர் சூழ்நிலைகளை எதிர்கொண்டிருந்தபோதிலும், இதுபோன்றதொரு நிலைமையை ஒருபோதும் அனுபவித்ததில்லை என சிபா மாகாண ஆளுநர் தோஷிஹிட்டோ குமாகாய் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போக்குவரத்து தடைப்பட்டதால் நரிடா வானுார்தி நிலையத்தில் சுமார் 7,000 பேர் சிக்கித் தவிப்பதாக வானுார்தி நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.







