நேபாளத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, சுமார் 200 கிலோமீற்றர் தொலைவை கடந்து இந்தியாவுக்குள் நுழைந்துள்ள நிலையில், மனித உடலங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் புதன்கிழமை காலை போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, நேபாளத்தின் பல பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
வெள்ளப்பெருக்கில் ஆற்றின் கரையோரங்களில் இருந்த கட்டடங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவை கண்டகி ஆற்றின் வழியாக இந்தியாவுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கண்டகி ஆற்றில் இருந்து நான்கு பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடலங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், இதுகுறித்து நேபாள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், குஷிநகர் பகுதியில் இருந்து மேலும் மூன்று பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மீட்கப்பட்ட ஏழு பேரின் உடலங்களின் புகைப்படங்கள் நேபாள அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பேரழிவில் இதுவரை 472 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 469 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சுமார் 1,400 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளப்பெருக்கினால் பல கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.









