இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படும் சம்பவங்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக ஆளுநர் இந்த விபரத்தை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்த போதே இந்த விவகாரம் குறித்துக் கலந்துரையாடியுள்ளதுடன், தமிழக கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வைக் காணுமாறும் இக்கோரிக்கையை விடுத்துள்ளதாக ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
நீண்டகாலமாக நீடித்து வரும் இந்த எல்லையோரக் கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இரு நாட்டு அரசாங்கங்களும் இராஜதந்திர ரீதியில் சுமுகமான தீர்வைக் காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், தமிழக முதலமைச்சரின் இந்த வலியுறுத்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.








