15 நோயாளிகளின் மரணங்களுக்கு காரணமான மருத்துவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Thursday, 09 July 2026 - 9:20

15+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%21
தனது 15 நோயாளிகளின் மரணங்களுக்குக் காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் தனியுரிமை விதிகளின்படி, ஜோஹன்னஸ் எம். என்று மட்டும் பெயரிடப்பட்ட 41 வயதான அந்த மருத்துவர், 2021 செப்டம்பர் முதல் 2024 ஜூலை வரை 12 பெண்கள் மற்றும் 3 ஆண்களின் மரணங்களுக்காக பெர்லினில் உள்ள ஒரு நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

அந்த மருத்துவர் சம்பந்தப்பட்ட மேலும் பல சம்பவங்கள் குறித்து அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தற்போது விசாரித்து வருகின்றனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் 25 முதல் 94 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும்; நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வீட்டு வருகைகளின் போது, ​​அந்த மருத்துவர் தனது நோயாளிகளின் அனுமதியின்றி பல்வேறு மருந்துகளின் கொடிய கலவையை அவர்களுக்கு வழங்கியதாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

பல சந்தர்ப்பங்களில், தனது தடயங்களை மறைப்பதற்காக அவற்றுக்கு குறித்த மருத்துவர் தீ வைத்ததாகவும் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2024-ல், அவர் கைது செய்யப்படுவதற்குச் சற்று முன்னர் அந்த மருத்துவர் ஒரே நாளில் இரண்டு நோயாளிகளின் மரணங்களுக்குக் காரணமாக இருந்ததாக அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இதன்போது மரணமான ஒரு மூதாட்டியின் வீட்டிற்கு மருத்துவர் தீ வைக்க முயன்றதாகவும், ஆனால் அதில் அவர் தோல்வியடைந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

சுமார் ஒரு வருடமாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையின் பெரும்பகுதி முழுவதும், அந்த மருத்துவர் எதுவும் கூறவில்லை.

ஆனால் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த தனது பன்னிரண்டு நோயாளிகளின் மரணங்களுக்கு தாம் காரணம் என்பதை அவர் கடந்த மாதம் ஒப்புக் கொண்டார்.

அவர்களை "துன்பத்திலிருந்தும் பலவீனத்திலிருந்தும்" காப்பாற்றுவதன் மூலம், தான் சரியானதைச் செய்வதாகத் தன்னைத்தானே நம்பவைத்துக் கொண்டதாக அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

இந்தநிலையில் தான் ஏற்படுத்திய அனைத்துத் துன்பங்களுக்கு மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த மருத்துவருக்கு எதிரான வழக்குகள் நிரூபிக்கப்பட்டு, அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அது ஜெர்மனியின் வரலாற்றில் நடந்த மிகப்பெரிய தொடர் கொலைச் சம்பவங்களில் ஒன்றாக இருக்கும் என்று ஜெர்மன் ஊடகங்கள் கூறுகின்றன.