இஸ்ரேல் படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனக் குழந்தை நல மருத்துவர் ஹசாம் அபு சஃபியாவின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஸா சுகாதார அமைச்சகத்தின் பணிப்பாயளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2024 முதல் இஸ்ரேலின் காவலில் உள்ள மருத்துவர் அபு சஃபியா, கண், தலை மற்றும் மார்புப் பகுதிகளில் காயங்களுடன் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், அவரின் உடல்நிலை குறித்து கடுமையான கவலை எழுந்துள்ளது.
வடக்கு காஸாவில் செயல்பட்ட மிக முக்கிய மருத்துவமனைகளில் ஒன்றான கமால் அத்வான் மருத்துவமனையின் பணிப்பாளராகப் பணியாற்றிய அபு சஃபியா, கடுமையான முற்றுகையின் போதும் நோயாளிகளுடன் இறுதிவரை அங்கேயே தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எந்தவித முறைசார்ந்த குற்றச்சாட்டுகளும் இன்றி, காலவரையறையின்றி நீடிக்கப்படும் சட்டத்தின் கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரது சட்டத்தரணி மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளான சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட்ட அமைப்புக்கள் அவரது உயிருக்கு உடனடி ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளன.









