இந்தியப் கோடீஸ்வரர் கௌதம் அதானி மீதான மோசடி மற்றும் கையூட்டல் குற்றவியல் வழக்குகளை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இருப்பினும், இந்த வழக்கை திரும்பப்பெற அமெரிக்க நீதித் திணைக்களம் எடுத்த முடிவு கவலையளிப்பதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டாட்சி சட்டத்தரணிகளின் வேண்டுகோளை ஏற்று, புருக்ளினில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கராஃபிஸ் , இந்த வழக்கை தள்ளுபடி செய்ய உத்தவிட்டார்.
அமெரிக்காவில் 10 பில்லியன் டொலர் முதலீடு செய்வதாக கௌதம் அதானி நவம்பர் 2024 இல் அளித்த வாக்குறுதி, வழக்கை திரும்பப் பெறும் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
வழக்கைப் புலனாய்வு செய்த அதிகாரிகளின் கருத்துகளைப் பெறாமல், அதானியின் சட்டத்தரணிகளுடன் இணைந்து முதன்மை துணை உதவி சட்டமா அதிபர் ட்ரென்ட் மெக்கவாட்டர் (Trent McCotter) வழக்கை திரும்பப் பெற எடுத்த முடிவு நடைமுறை மீறல் என்றும் நீதிபதி சாடினார்.
இந்தநிலையில், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பணிவுடனும் நீதித்துறை செயல்முறையின் மீதான ஆழ்ந்த மரியாதையுடனும் வரவேற்பதாக கௌதம் அதானி தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
சிவில் வழக்குகள் தொடர்பாக கௌதம் அதானி 6 மில்லியன் டொலர்களையும், அவரது மருமகன் சாகர் அதானி 12 மில்லியன் டொலர்களையும் அபராதமாக செலுத்த ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஈரான் மீதான தடைகளை மீறிய குற்றச்சாட்டுகளைத் தீர்க்க 'அதானி என்டர்பிரைசஸ்' நிறுவனம் அமெரிக்க திறைசேரிக்கு 275 மில்லியன் டொலர்களை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
ஜனாதிபதி ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் உயர் மட்ட குற்றவியல் வழக்குகளை நீதித்திணைக்களம் திரும்பப் பெறும் வரிசையில் இந்த வழக்கும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








