General04 July 2026

பொறுப்புமிக்க வணிகச் சூழலை உருவாக்க புதிய வழிகாட்டல்கள்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வரலாற்றில் முதற்தடவையாக வணிகம் மற்றும் மனித உரிமைகள் மீதான தேசிய வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெருநிறுவனங்களின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளில் மனித உரிமைக் கோட்பாடுகளைக் கட்டாயமாக உள்வாங்குவதையும், பொறுப்புவாய்ந்த வணிக நடத்தைகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் வணிகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான துணைக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட இந்த மைல்கல் திட்டத்திற்கான ஆரம்பக் கோவையை, அதன் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்புப் பிரிவு தயாரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் வணிகம் மற்றும் மனித உரிமைகள் மீதான வழிகாட்டல் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய சட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது.

வணிக நிறுவனங்கள் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கும், அவற்றின் செயல்பாடுகளால் ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கங்களைத் தடுத்து, அவற்றுக்கு உரிய தீர்வுகளைக் காண்பதற்கும் இந்த வழிகாட்டல்கள் ஒரு நடைமுறை வழிகாட்டியாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன், "இலங்கை மற்றும் மாலைதீவில் வணிகம் மற்றும் மனித உரிமைகளை அங்கீகரிப்பதை ஊக்குவித்தல்" என்ற திட்டத்தின் கீழ் இதற்கான தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

சர்வதேச அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான மெக்ஸ் பிளாங்க் அறக்கட்டளை மற்றும் வளமான எதிர்காலத்துக்கான நிலையம் ஆகிய அமைப்புகள் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.

தனியார் துறை உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைகளைத் தொடர்ந்து, இந்த வழிகாட்டல்கள் இறுதி செய்யப்பட்டன.

வெளியீட்டுக்கு முன்னர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வணிகம் மற்றும் மனித உரிமைகள் துணைக்குழு மற்றும் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் துணைக்குழு ஆகியவற்றினால் இவை முழுமையான மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக ஆணைக்குழுவின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes