International26 July 2026

நோர்மாண்டி D-Day கடற்கரைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாகப் பிரகடனம்!

இரண்டாம் உலகப் போரின்போது, அடோல்ப் ஹிட்லரின் நாசிசப் படைகளை எதிர்த்துப் போராடி பிரான்சை மீட்பதற்காக 1944 ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி நேச நாட்டுப் படைகள் தரையிறங்கிய நோர்மாண்டி (Normandy) D-Day கடற்கரைகள், யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யுனெஸ்கோ தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கடற்கரைகள் 1944ஆம் ஆண்டு நிகழ்வுகளாலும் அவற்றின் அழியாத நினைவுகளாலும் உருவான "விதிவிலக்கான கலாசார நிலப்பரப்பாகும்" எனவும், அதனாலேயே இது பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது, 1944 ஜூன் 6 ஆம் திகதி நாசி ஜேர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த பிரான்சை மீட்க நேச நாட்டுப் படைகள் நோர்மாண்டி கடற்கரை வழியாக மேற்கொண்ட மாபெரும் கடல்வழித் தாக்குதலின் தொடக்க நாளே 'D-Day' என அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளும், நினைவுகூரல் நிகழ்வுகள் இந்த கடற்கரைய வழக்கமாக இடம்பெறுகின்றன.

இந்தத் தரையிறக்க நடவடிக்கையில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பெல்ஜியம், நோர்வே, போலந்து, லக்ஸம்பேர்க், கிரேக்கம், செக்கோஸ்லோவாக்கியா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராணுவத்தினர் கலந்துகொண்டனர்.

இவர்களில் 177 பிரான்ஸ் நாட்டு கொமாண்டோ வீரர்களும் அடங்குவர்.

நாசி ஜேர்மனியிடமிருந்து ஐரோப்பாவை விடுவிப்பதில் இந்தத் தாக்குதல் ஒரு தீர்க்கமான கட்டமாக அமைந்தது.

ஒட்டுமொத்தமாக 156,115 நேச நாட்டுத் துருப்புகள் கடல் வழியாக (யூட்டா, ஒமாஹா, கோல்ட், ஜூனோ மற்றும் ஸ்வேர்ட் எனப் பெயரிடப்பட்ட கடற்கரைகளில்) தரையிறங்கி, தாக்குதலில் ஈடுபட்டன.
Related recommendation
Hiru TV News | Programmes