International31 July 2026

10 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் கொள்ளையடித்த எலி

இந்தியாவின் கர்நாடக மாநிலம் துமகூரு நகரிலுள்ள பிரபல நகையகமொன்றில், விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த 10 வைர மோதிரங்களும் 2 தங்கச் சங்கிலிகளும் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 10 லட்சம் இந்திய ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நகையகத்தின் பூட்டுகள் உடைக்கப்படாததுடன், நகையகத்துக்குள் யாரும் அத்துமீறி நுழைந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாததால், ஆரம்பத்தில் அதன் உரிமையாளர் ஊழியர்கள் மீது சந்தேகம் கொண்டிருந்தார்.

இதையடுத்து, நகையகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது, இரவு நேரத்தில் அங்கு சுற்றித்திரிந்த எலி ஒன்று, வைர மோதிரங்களையும் தங்கச் சங்கிலிகளையும் ஒவ்வொன்றாக வாயில் கவ்விக்கொண்டு சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தமை தெரியவந்தது.

இதையடுத்து, மர அலுமாரிகளும் அவற்றின் பின்புறப் பகுதிகளும் முழுமையாக சோதனைக்குட்படுத்தப்பட்டன.

சுமார் 13 மணி நேர தேடுதலின் பின்னர், மரப் பலகையின் பின்புறத்தில் இருந்த துளையொன்றிலிருந்து காணாமல் போன அனைத்து நகைகளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட நகைகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்றும், அவற்றில் பொருத்தப்பட்டிருந்த விலைப் பட்டியல்கள் மட்டுமே சேதமடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட நகைகள் பாதுகாப்பாக மீளக் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாத வகையில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகையக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes