International04 August 2026

கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ – பேரழிவு நிலைமை!

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் காட்டுத்தீ தீவிரமடைந்துள்ளதால், சுமார் 60,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நூற்றுக் கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.

ஸ்போகேன் நகரத்தைச் சுற்றி மூன்று பெரிய காட்டுத்தீ கட்டுப்பாடற்ற முறையில் தொடர்ந்து எரிந்து வருவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

"எமது பிராந்தியம் சந்தித்துள்ள மிக மோசமான இயற்கை பேரழிவு இது" என ஸ்போகேன் மேயர் லிசா பிரவுன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, வொஷிங்டன் மாநில ஆளுநர் பாப் பெர்குசன் மாநிலம் முழுவதும் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

நிலைமையைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் கூட்டாட்சி உதவியைக் கேட்டுள்ளதாக மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதுவரை வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் உட்பட சுமார் 600 கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளன.

மேலும் 10,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சார இணைப்பை இழந்துள்ளனர்.

பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாகத் தீ வேகமாகப் பரவி வருகின்றது.

இதுவரை உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ உறுதி செய்யப்படாத போதிலும், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், வெளியேறுமாறு அறிவுறுத்தப்படும் போது உடனடியாக ஒத்துழைக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes