General12 August 2026

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நாட்டின் பொது நலனுக்காக எடுக்கப்பட்ட தீர்மானம் - ஜனாதிபதி

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை நீடிப்பது தொடர்பான தீர்மானம் எந்தவொரு தனிநபரையோ அல்லது குழுவையோ இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டதல்ல என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாறாக, நாட்டின் பொதுநலனை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை நீடிப்பது தொடர்பான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நீதித்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது விளக்கமளித்துள்ளார்.

நீதியை நிலைநாட்டும் செயற்பாடு நீதிமன்றங்களால் மாத்திரம் முன்னெடுக்கப்படுவதில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விசாரணைகள், வழக்குத் தாக்கல் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சட்ட மாஅதிபர் திணைக்களம், கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு, இலங்கை காவல்துறை மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகியவற்றின் மனிதவளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொதுமக்கள் இலகுவாக அணுகக்கூடிய வகையில் அதன் நடவடிக்கைகளை மாகாண மட்டத்திலும் முன்னெடுப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மக்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீதிமன்றங்களுக்குத் தேவையான பௌதிக வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை நீடித்தல் உள்ளிட்ட விடயங்களில் கொள்கை ரீதியான எதிர்ப்புகள் எதுவும் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், ஓய்வுபெறும் வயது வரம்பை நீடிப்பது தொடர்பான தீர்மானம் குறித்து மேலும் ஆராய்ந்து, பொதுவான இணக்கப்பாட்டுக்கு வருவது பொருத்தமானது என அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இந்தச் சீர்திருத்தங்கள் நாட்டின் நீதித்துறை எதிர்கொள்ளும் கட்டமைப்புசார் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பரந்த மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும் எனவும், இது தனது தனிப்பட்ட கருத்தோ அல்லது அரசாங்கத்தின் தனிப்பட்ட நிலைப்பாடோ அல்ல எனவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes