General13 August 2026

கித்துல்கலையில் கைக்குண்டு மீட்பு

நுவரெலியா, கித்துல்கலை பகுதியில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

கித்துல்கலை காவல்துறையினர் சூரியன் செய்தி பிரிவுக்கு இதனை உறுதிபடுத்தினர்.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கைக்குண்டொன்று காணப்படுவதாக காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற கித்துல்கலை காவல்துறையினர் அந்தப் பகுதியை பாதுகாப்பான முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், விசேட அதிரடிப்படையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் மூலம் மீட்கப்பட்ட கைக்குண்டு உரிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அந்தப் பகுதியில் ஏற்படக்கூடிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த கைக்குண்டு அந்தப் பகுதிக்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டது, அது எவ்வளவு காலமாக அங்கு இருந்தது என்பது தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும், கைக்குண்டு மீட்கப்பட்ட பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேறு ஏதேனும் வெடிபொருட்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாகவும் கித்துல்கலை காவல்துறையினர் சூரியன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தனர்.
Related recommendation
Hiru TV News | Programmes