International12 September 2026

லண்டனில் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் விஜய்!

பிரித்தானியாவில் நடைபெறுகின்ற சர்வதேச 'லீ மேன்ஸ் கிண்ண' சிற்றூந்து பந்தயத்தை, தமிழக முதலமைச்சர் விஜய் கொடியசைத்து உத்தியோகபூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகப் பிரித்தானியா சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், நடிகரும் சிற்றூந்து ஓட்டவீரருமான அஜித் குமாரின் விசேட அழைப்பின் பேரில் புகழ்பெற்ற 'சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்' களம் சென்று இந்தப் போட்டியைத் தொடங்கி வைத்துள்ளார்.

பந்தயக் களத்திற்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் விஜய், அங்குப் போட்டியாளராகக் களமிறங்கிய நடிகர் அஜித் குமாரை ஓடிச் சென்று கட்டியணைத்து வாழ்த்தியதுடன், அஜித்தின் பந்தய சிற்றூந்தின் மீது அமர்ந்து படங்களும் எடுத்துக்கொண்டார்.

தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ அமைக்கப்படும் என அண்மையில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னணி மோட்டார் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காகவும் முதலமைச்சர் விஜய் சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்திற்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இருவரது இந்தச் சந்திப்பு தொடர்பான படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes