Sports25 August 2026

எம்.எஸ்.தோனி, மார்க் பவுச்சரின் சாதனைகளை முறியடித்தார் ரிஷப் பண்ட் !

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 63 ஓட்டங்கள் குவித்த இந்திய அணியின் விக்கெட் காப்பாளர்/ துடுப்பாட்டவீரர் ரிஷப் பண்ட், வெளிநாட்டு மண்ணில் அதிக டெஸ்ட் ஓட்டங்களை குவித்த விக்கெட் காப்பாளர்களின் பட்டியலில் எம்.எஸ். தோனி மற்றும் மார்க் பவுச்சரின் சாதனைகளை முறியடித்துள்ளார்.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது காயம் காரணமாகக் களத்திலிருந்து வெளியேறிய ரிஷப் பண்ட், இரண்டாவது நாள் ஆட்டத்தில் மீண்டும் களமிறங்கினார்.

பொறுப்புடனும் அதிரடியாகவும் விளையாடிய அவர், தனது 21ஆவது அரை சதத்தை விளாசிய நிலையில் 89 பந்துகளில் 63 ஓட்டங்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.

இந்த இன்னிங்ஸின் மூலம், வெளிநாட்டு மைதானங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 2,500 ஓட்டங்களை கடந்த முதல் இந்திய விக்கெட் காப்பாளர் துடுப்பாட்ட வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.

உலக அளவில் இந்தச் சாதனையை எட்டும் மூன்றாவது விக்கெட் காப்பாளர் இவராவார்.

இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ். தோனி வெளிநாட்டு மண்ணில் 48 டெஸ்ட் போட்டிகளில் 2,496 ஓட்டங்ளும், தென் ஆபிரிக்காவின் மார்க் பவுச்சர் 72 போட்டிகளில் 2,514 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.

தற்போது ரிஷப் பண்ட் 36 போட்டிகளில் 6 சதங்கள், 11 அரை சதங்களுடன் 2,534 ஓட்டங்களை குவித்து இருவரையும் பின் தள்ளியுள்ளார்.

இந்த வகை சாதனைப் பட்டியலில் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சர்ஃபராஸ் அஹமட் 52 போட்டிகளில் 2,696 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 41 போட்டிகளில் 2,634 ஓட்டங்களை குவிந்து இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes