Sports30 August 2026

மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத் தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கையிடமிருந்து பறிபோனது!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடுகள் தொடர்வதனால், 2027 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த முதலாவது ஐ.சி.சி. மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத் தொடரை நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

6 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடர், எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இலங்கையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், இந்தப் போட்டித் தொடரை வேறு நாட்டிற்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்தப் போட்டித் தொடர் நடத்தப்படும் புதிய இடம் குறித்த முடிவு, அடுத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை நிர்வாகக் குழுவுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தற்போது அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட மறுசீரமைப்புக் குழுவினால் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றது.

இதனால், சர்வதேச கிரிக்கெட் பேரவை கூட்டங்களில் பங்கேற்க இலங்கை பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் தேர்தலை நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவை வலியுறுத்தி வருகின்றது.

இந்தத் தொடர் கைநழுவிப் போனதால், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கும் நாட்டிற்கும் கிடைக்கவிருந்த பெரும் வருமானம் இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், இலங்கை மகளிர் அணியின் தகுதிபெறும் வாய்ப்பிலும் சிக்கல் உருவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes