General26 January 2026

இன்டர்போல் அமைப்பைத் தவறாகப் பயன்படுத்தும் ரஷ்யா: கசிந்த ஆவணங்களில் அம்பலம்

சர்வதேச காவல்துறையில் (இன்டர்போல்) பணிபுரியும் ஒரு நபர் கசியவிட்ட ஆயிரக்கணக்கான இரகசியக் கோப்புகள், ரஷ்யா எவ்வாறு சர்வதேச பிடியாணைகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள தனது விமர்சகர்களையும் அரசியல் எதிரிகளையும் குறிவைக்கிறது என்பதை முதன்முதலாக ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
கடந்த 10 ஆண்டுகளில், இன்டர்போலின் தன்னாட்சி பெற்ற முறைப்பாடுகள் பிரிவுக்கு வந்துள்ள முறைப்பாடுகளில் ரஷ்யாவிற்கு எதிரான புகார்களே முதலிடத்தில் உள்ளன. 
 
இது இரண்டாவது இடத்தில் உள்ள துருக்கியை விட மூன்று மடங்கு அதிகமாகும். 
 
ரஷ்யாவின் கோரிக்கையின் பேரில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளில் சுமார் 400 க்கும் மேற்பட்டவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனக் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன. 
 
ரஷ்யா பொதுவாக அரசியல் எதிரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அதிருப்தியில் உள்ள தொழிலதிபர்களை நிதி மோசடி அல்லது ஊழல் போன்ற பொதுவான குற்றங்களைச் செய்ததாகக் கூறி இன்டர்போல் தரவுத்தளத்தில் இணைக்கிறது. 
 
இது ஒரு நபரை உலகளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அனைத்து நாடுகளும் அவரைக் கைது செய்யக் கோரும் அறிவிப்பாகும். இது குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் நேரடியாக அனுப்பப்படும் கைது கோரிக்கையாகும். 
 
ரஷ்யத் தொழிலதிபரான ஈகோர் பெஸ்ட்ரிகோவ் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். தனது நிறுவனங்களை இராணுவத் தேவைக்காகப் பயன்படுத்த ரஷ்ய அரசுக்கு விட்டுக்கொடுக்க மறுத்ததால், அவர் மீது நிதிக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 
 
இதனால் பிரான்சில் தஞ்சம் புகுந்த அவர், இன்டர்போல் பிடியாணையில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, தலைமறைவாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். 
 
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என இன்டர்போல் அந்த பிடியாணையை ரத்து செய்தது. 
 
2022 இல் யுக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு, ரஷ்யாவின் கோரிக்கைகளை இன்டர்போல் கூடுதல் கவனத்துடன் சோதிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. 
 
இருப்பினும், 2024 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் 90 வீதமான கோரிக்கைகள் ஆரம்பகட்ட சோதனைகளில் தப்பித்துவிட்டன. 
 
ஆனால், மேல்முறையீட்டின் போது அதில் பாதிக்கும் மேற்பட்டவை தவறானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. 
 
இது இன்டர்போலின் சோதனை முறை பலவீனமாக இருப்பதையே காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்த போது, அதற்குப் பதிலடியாக அந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் மீது இன்டர்போல் ஊடாக பிடியாணை பிறப்பிக்க ரஷ்யா முயற்சித்தது. 
 
இருப்பினும், இந்த முயற்சி இன்டர்போலால் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes