இலங்கையில் நிலவும் நீண்டகால இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, தமிழ்த் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான புதிய அரசியல் தீர்வுத்திட்ட வரைபை தயாரிக்கும் பணிகளை 'ஈழத் தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை' உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பாக ஈழத் தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபையின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி.தி.விக்னேஸ்வரன் (முதுநிலை விரிவுரையாளர்) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்த் தேசியப் பேரவையினால் 15.02.2026 அன்று குடிசார் அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள், துறைசார் நிபுணர்கள், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சமயத்தலைவர்கள் உள்ளிட்ட 28 உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு யாழ் நல்லூரில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் அரசியலமைப்பு செயன்முறைகள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஒன்றையாட்சிக்கு உட்பட்ட எந்த வடிவிலான தீர்வையும் நிராகரித்தும், திம்புக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு தீர்வு திட்ட வரைபை தயாரிப்பது என்றும் இணங்கப்பட்டது.
இலங்கையில் 77 ஆண்டுகளாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் என்னும் பெயரில் தற்போது இலங்கையை ஆளும் அனுரகுமார திசநாயக்க அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுக் கொண்டுவரப்படவுள்ள ‘ஏக்ய ராஜ்ய’ (ஒற்றையாட்சி அரசு) அரசியல் யாப்பானது ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, தமிழர் தேசம், இறைமை அடிப்படையிலான கூட்டாட்சிக் கோரிக்கையை அடியோடு மறுதலிக்கும் ஒற்றையாட்சி வரைபாகும் என்பதுடன் அதனை முற்றாக நிராகரிக்க வேண்டுமெனவும் இணக்கம் காணப்பட்டது.
குறித்த செயன்முறையை முன்னெடுத்துச் செல்வதற்கு, குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட குடிசார் அமைப்புக்கள் அரசியல் தரப்புக்கள், சமயத் தலைவர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களையும் உள்ளடக்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை செயற்படும் என்றும் இணங்கப்பட்டது.
இனப்பிரச்சினைக்கான தீர்வாக, தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினை கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைபை தயாரிப்பதற்காக, வழி நடத்தல் குழுவை தெரிவு செய்து அறிவிப்பதுடன் இச் செயன்முறைகளை முன்னெடுத்துச் செல்லும் ஒருங்கிணைப்பாளராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியற்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி.தி.விக்னேஸ்வரன் அவர்கள் செயற்படுவார் என்றும் இணக்கங்காணப்பட்டது.
அதன் பிரகாரம் இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்;திற்கும் ஈழத்தமிழர்களது இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையை முன்வைப்பதற்கும், அரசியல் விவாதங்களின்போதும் ஆலோசனைகளின்போதும் ஈழத் தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த மற்றும் பொதுவான நிலைப்பாட்டை முறையாக முன்வைக்கும் நோக்கில் ஒரு அரசியல் தீர்வுத்திட்ட வரைபை உருவாக்குவதற்காக, ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபையின் வழிநடத்தல் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. (இக்குழுவில் வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் மேலும் உறுப்பினர்கள் உள்வாங்கப்படுவர்).
குறித்த தீர்வுத்திட்ட வரைபு தயாரிப்பதற்கான ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் வழிநடத்தல் குழுவானது,
1.சமூக ஒப்பந்தம் ஒன்றிற்கான வரைபு தயாரித்தல்: தமிழர் தேசமும் அதன் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் முழுமையான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமூக ஒப்பந்தம் ஒன்று தமிழர் தேசத்திற்கும் - சிங்கள தேசத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்படல் வேண்டும். அவ்வாறான சமூக ஒப்பந்தம் ஒன்றிற்கான வரைபைத் தயாரித்தல்.
2.விரிவான கூட்டாட்சித் தீர்வுத்திட்ட வரைபு தயாரித்தல்: தமிழர் தேசமும் அதன் தனித்துவமான இறைமையும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் முழுமையான சுயநிர்ணய உரிமையை கூட்டாட்சி முறைமைக்குள் அனுபவிப்பதற்கான விரிவான தீர்வுத்திட்ட வரைபு ஒன்றை தயாரித்தல்.
இக்குழுவானது தீர்வுத்திட்ட வரைபு உருவாக்க செயன்முறைகளை முன்னெடுக்கும்போது, தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட வரைபு, (தமிழ் மக்கள் பேரவையின் அரசியலமைப்பு வரைபு ஆக்கக்குழுவினரால் தயாரிக்கப்பட்டு ஈழத் தமிழர் சமூகத்தின் விரிவான கலந்தாய்விற்கும் பொதுக் கருத்துப் பெறலுக்கும் உட்படுத்தப்பட்டு, இறுதி செய்யப்பட்டு 10 ஏப்ரல் 2016 இல் வெளியிடப்பட்டது) இடைக்கால தன்னாட்சி அதிகாரக் கட்டமைப்புக்கான யோசனைகள், சர்வதேச மட்டத்திலுள்ளதான தேசங்களை அங்கீகரிக்கக்கூடிய கூட்டாட்சி முறைமைகள், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தரப்பிலிருந்துவரும் முன்மொழிவுகள் போன்ற யோசனைகளைக் கருத்தில் கொண்டு, அவற்றின் சாராம்சங்களையும் அடிப்படை கோட்பாடுகளையும் ஒருங்கிணைத்த விரிவான மற்றும் பொதுவான அரசியல் தீர்வுத்திட்ட வரைபை உருவாக்கும்.
இந்தச் செயல்முறையின் ஆரம்ப கட்டமாக, குறித்த வழிநடத்தல் குழு ஒரு உத்தேச அறிக்கையைத் தயாரிக்கும். அதனைத் தொடர்ந்து, அந்த உத்தேச அறிக்கை பொது மக்களது கருத்துக்களை அறிவதற்காக வெளியிடப்பட்டு, வடக்கு–கிழக்கு தாயகப் பிரதேசங்களில் வாழும் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுடனும், குடிசார் அமைப்புகளுடனும், அரசியல் - சமூக வகிபாகக்காரர்களுடனும் பொருத்தமான துறைசார் ஆர்வலர்களிடமிருந்தும் கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் பெறப்படுவதுடன் திறந்த மற்றும் வெளிப்படையான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு பெறப்படும் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் அனைத்தும் முறையாக ஆய்வு செய்யப்பட்டு பரிசீலிக்கப்பட்ட பின்னர், அவற்றை கருத்தில் கொண்டு இறுதி அரசியல் தீர்வுத்திட்ட வரைபு தயாரிக்கப்பட்டு நிறைவு செய்யப்படும். இக்குழுவால் தயாரிக்கப்படும் இறுதி யோசனையானது தமிழ்த் தேசத்தின் ஏகோபித்த தீர்வுத்திட்ட முன்மொழிவாக முன்வைப்பதே இந்த வரைபு உருவாக்கத்தின் நோக்கமாகும். இக்குழுவானது அடுத்துவரும் மூன்று மாதங்களுக்குள் தனது உத்தேச அரசியல் தீர்வுத்திட்ட வரைபை முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest News
எச்சரிக்கை நிலையை எட்டும் வெப்பநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!
Local
18 July 2026
பெருந்தோட்ட குடும்பங்கள் வெளியேற்றம்: சட்டப் போராட்டத்தில் களமிறங்கும் செந்தில் தொண்டமான்
Local
18 July 2026
விடுதியில் மாணவர்களின் அவலம் - முதல்வர் விஜய்யின் ஆய்வில் வெடித்த மாணவர்களின் முறைப்பாடுகள்
Local
18 July 2026
நடிகை ஜாக்குலினின் ஏஐ அவதாரம்!
Local
18 July 2026
கால்பந்து செம்;பியன்ஷிப் வெற்றியாளர்களுக்கு அமெரிக்க மோதிரங்கள்
Local
18 July 2026
உலக எரிசக்தி சந்தை : எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம்
Local
18 July 2026
சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் இலங்கைக்குள் போதைப்பொருள்! சுங்கத்தின் அதிர்ச்சி எச்சரிக்கை
Local
18 July 2026
மண்ணெண்ணெயில் இயங்கும் பேருந்துகள்: காவல்துறை அதிரடி நடவடிக்கை!
Local
18 July 2026
கால்பந்து செம்பியன்ஷிப்பின் மூன்றாம் இட போட்டியில் நடக்கப்போகும் முக்கிய நிகழ்வுகள்
Local
18 July 2026
ஆறாவது இரவில், ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள அமெரிக்கா
Local
18 July 2026