General30 April 2026

பாம் எண்ணெய் இறக்குமதியால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய நஷ்டம்

இலங்கை 2025 ஆம் ஆண்டில் 38,210 மெட்ரிக் டொன் பாம் எண்ணெயையும், 33,696 மெட்ரிக் டொன் தேங்காய் எண்ணெயையும் இறக்குமதி செய்துள்ளதாக பேராசிரியர் அசோக நுகவெல தெரிவித்துள்ளார்.

நேற்று பாம் செய்கை தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

2024 ஆம் ஆண்டில் 34,708 மெட்ரிக் டொன் பாம் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2025 இல் அது 38,210 மெட்ரிக் டொன்னாக அதிகரித்துள்ளது.

அத்துடன், 2025 ஆம் ஆண்டில் பாம் எண்ணெய் இறக்குமதிக்காக மட்டும் இலங்கை 140,022 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

மேலும், உலக சந்தையில் தற்போது பாம் எண்ணெய் ஒரு மெட்ரிக் டொன் சுமார் 1,100 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

பாம் செய்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் நாடு பாரிய வருமானத்தை இழந்துள்ளதாக பேராசிரியர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் 2021 ஆம் ஆண்டு பாம் செய்கைக்குத் தடை விதிக்கப்பட்டது.

இவ்வாறான தடையை விதித்துள்ள உலகின் ஒரே நாடு இலங்கை மாத்திரமே என அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தடையின் காரணமாக சுமார் 8,000 ஹெக்டேயர் புதிய செய்கை நிலங்களை விஸ்தரிக்க முடியாமல் போயுள்ளது.

மேலும், முறையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிரிடப்பட்டால், ஒரு ஹெக்டேயரில் இருந்து சுமார் 4 மெட்ரிக் டொன் எண்ணெயைப் பெற முடியும் என அவர் மேலும் விளக்கமளித்தார்.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் பெருமளவு அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதையும் பார்க்க..


Related recommendation
Hiru TV News | Programmes