General16 June 2026

முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் பேரணியாக ஜனாதிபதி செயலகத்துக்கு!

வாராந்திர எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறும், முச்சக்கரவண்டிகளுக்கான ஒற்றை-இரட்டை (Odd-Even) இலக்க முறையை நீக்குமாறும் கோரியும் முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் கொழும்பில் பேரணியொன்றை முன்னெடுத்ததுடன், ஜனாதிபதியிடம் விசேட மனு ஒன்றையும் கையளித்துள்ளனர்.

தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்வைத்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி இந்த விழிப்புணர்வுப் பேரணியை அவர்கள் நடத்தியுள்ளனர்.

இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட பேரணி ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து விளக்கினர்.

“தற்போது வாரத்திற்கு வெறும் 20 லீற்றர் எரிபொருளே முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படுகிறது, அதாவது ஒரு நாளைக்குச் சராசரியாக 2.8 லீற்றர் மட்டுமே கிடைக்கிறது.

இந்த மிகக் குறைந்த அளவு எரிபொருளை வைத்துக்கொண்டு தங்களால் தொழில் செய்ய முடியாது எனவும், முச்சக்கரவண்டிகளை வீதிகளில் தள்ளிக்கொண்டு செல்லும் நிலையே இனி ஏற்படும் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தங்கள் தொழிலைப் பாதுகாக்குமாறும், வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துமாறும் கோரி ஜனாதிபதியிடம் இந்த மனுவை சமர்ப்பிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், சர்வதேச ரீதியில் ஹோர்முஸ் நீரிணை தற்போது திறக்கப்பட்டுள்ளதோடு, அமைதிப் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஓட்டுநர்கள், உலகளாவிய ரீதியில் சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள பின்னணியில், அரசாங்கம் தங்களுக்கு உடனடியாக எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், இந்த பேரணியின் மூலம் நல்லதொரு தீர்வு கிடைக்கும் எனத் தாங்கள் நம்புவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes