General16 June 2026

கொலன்னாவ வெள்ளப் பாதிப்பு மற்றும் குழாய் வழிக் குடியிருப்பாளர்களுக்கு புதிய வீடுகள் : அமைச்சரவை அதிரடி முடிவு!

கொலன்னாவ பிரதேசத்தில் தொடர்ச்சியாக வெள்ள அனர்த்தத்திற்குள்ளாகும் குடும்பங்கள் மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிலத்தடி எண்ணெய்க் குழாய் வழியில் அபாயகரமாகக் குடியமர்ந்துள்ள குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்காக, தற்காப்பு நடவடிக்கையாக முடங்கியுள்ள அதிவேக நெடுஞ்சாலைக் கருத்திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட புதிய வீடுகளைப் பயன்படுத்துவதற்குத் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது.

கொலன்னாவ பிரதேசத்தில் தொடர்ச்சியாக வெள்ள அனர்த்தத்திற்குள்ளாகும் 336 குடும்பங்கள் மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிலத்தடி எண்ணெய்க் குழாய் வழியில் சட்டவிரோதமாகக் குடியமர்ந்துள்ள 72 குடும்பங்களை தற்போது குடியமர்ந்துள்ள அபாயகரமான இடங்களிலிருந்து அவசரமாக அகற்ற வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

புதிய களனிப் பாலம் தொடக்கம் அத்துருகிரிய வரையான, தூண்கள் மீது செல்கின்ற அதிவேக நெடுஞ்சாலைக் கருத்திட்டத்தின் கீழ் அகற்றப்படும் குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் 1,100 வீட்டு அலகுகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.

நகர அபிவிருத்தி அதிகாரசபை மூலம் அமுல்படுத்தப்படும் கொலன்னாவ ‘சங்ஹிந்த செவன’, ஹேனமுல்ல ‘ஹெலமுத்து செவன’ மற்றும் மாளிகாவத்த ‘லக்ஹிரு செவன’ ஆகிய வீட்டுத் திட்டங்களிலேயே இவை கொள்வனவு செய்யப்பட்டன.

ஆயினும், குறித்த நெடுஞ்சாலைக் கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளதால், இக்கருத்திட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கைவசம் உள்ள வீடுகள் வீணாவதைத் தடுக்கும் நோக்கோடும், மக்களின் அவசரத் தேவையைக் கருத்திற் கொண்டும், கொள்வனவு செய்யப்பட்ட வீட்டு அலகுகளைப் பின்வருமாறு பகிர்ந்தளிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

கொலன்னாவ ‘சங்ஹிந்த செவன’ வீட்டுத்திட்டம்:
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்படும் 336 குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்காக 336 வீட்டு அலகுகள் ஒதுக்கப்படும்.

ஹேனமுல்ல ‘ஹெலமுத்து செவன’ வீட்டுத்திட்டம்:
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிலத்தடி எண்ணெய்க் குழாய் வழியில் குடியமர்ந்துள்ள குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்காக 72 வீட்டு அலகுகள் பயன்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம் கொலன்னாவ பகுதியில் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பாதுகாப்பான நிரந்தர வீடுகள் கிடைக்கப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes