General17 June 2026

வருண ஜயசுந்தரவின் மனு மீதான விசாரணைகளை நிறைவு செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தரவை தற்போதைய நிலையில் கைது செய்வதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்து, அவர் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணைகளை நிறைவு செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) தீர்மானித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் தொடர்பில், தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி வருண ஜயசுந்தரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சஷி மகேந்திரன் மற்றும் ஆதித்ய பட்டபெந்திகே ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதற்கு முன்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, மனுதாரரான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரை இடமாற்றம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதுகுறித்த சமர்ப்பிப்புகளை இன்று நீதிமன்றத்தில் முன்வைத்த பிரதி மன்றாடியார் நாயகம், மனுதாரரின் இடமாற்றம் தொடர்பான உரிய பரிந்துரைகளை காவல்துறை மா அதிபர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளார் எனத் தெரிவித்தார்.

அதற்கமைய, தற்போதைய கட்டத்தில் மனுதாரரைக் கைது செய்வதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் தரப்பில் நீதிமன்றத்திற்கு உறுதிமொழி வழங்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் குழாம், மனு மீதான மேலதிக விசாரணைகளை இத்துடன் நிறுத்துவதாக அறிவித்தது.
Related recommendation
Hiru TV News | Programmes