General24 June 2026

"அங்கு பெரிய முதலைகள் இருக்கின்றன..!" - நாடாளுமன்றத்தில் நாவல பாலம் குறித்து ஹர்ஷ டி சில்வா காரசாரம்!

நாவல - ராஜகிரிய பகுதியை இணைக்கும் புதிய பால நிர்மாணப் பணிகள் முறையான போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீடுகள் இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற கேள்வி நேரத்திலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

"கொவிட் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த காலத்தில், யாருடனும் எவ்வித கலந்துரையாடல்களையும் நடத்தாமல், கடந்த அரசாங்கம் 40க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் வந்து, வலுக்கட்டாயமாக இந்த பாலப் பணிகளை ஆரம்பித்தது" என்று குற்றம் சுமத்தினார் .
 
இப்பகுதி மிகவும் உணர்திறன் மிக்க ஒரு ஈரநில வலய அமைப்பாகும் எனக் குறிப்பிட்ட அவர், உலகிலேயே அரிதான கொடுப்புலி (Fishing Cat) மற்றும் கருங்குரங்கு போன்ற விலங்கினங்கள் இங்கு வாழ்கின்றன என்றார்.

மேலும், "கடந்த சில தினங்களுக்கு முன்னர் நான் அங்கு சென்றிருந்த போது, அந்த நீர்நிலைப் பகுதியில் மாபெரும் 'கெடகிம்புலா' (முதலை) ஒன்றைக் கண்டேன்.

இவ்வாறான சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் முறையான சுற்றுச்சூழல் அனுமதிகள் இன்றி எவ்வாறு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது?" என அவர் கேள்வி எழுப்பினார் .

இந்தப் பாலம் அமைந்துள்ள அங்கம்ப்பிட்டிய வீதி மற்றும் ஜனாதிபதி மகளிர் கல்லூரிக்கு அருகிலுள்ள வீதிகள் மிகவும் குறுகியவை . பாலத்தை விட வீதிகள் குறுகலாக இருப்பதால் இதனைத் திறந்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் .

வீதியை அகலப்படுத்த வேண்டுமாயின், 1940ஆம் ஆண்டின் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை மதிலை இடிக்க வேண்டி வரும்.

எமது கலாசார பாரம்பரியத்தை அழித்து இந்த வீதியை அகலப்படுத்த முடியாது" என்றும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ,

கடந்த காலங்களில் திட்டமிடல் இன்றி மக்களின் பணம் எவ்வாறு வீணடிக்கப்பட்டது என்பதற்கு இந்தப் பாலமே சிறந்த உதாரணம் என ஒப்புக்கொண்டார் .

"2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்திற்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து சுமார் 2.5 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது தற்போது 99 வீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மக்கள் பணத்தில் கட்டப்பட்ட பாலத்தை எம்மால் இடித்துத் தள்ள முடியாது .

எனவே, எதிர்வரும் ஒக்டோபர் மாத அளவில் காவல்துறையினருடன் இணைந்து முறையான போக்குவரத்து பகுப்பாய்வு ஒன்றை மேற்கொண்டு, எந்தெந்த வாகனங்களை எந்த நேரங்களில் அனுமதிப்பது என்பது குறித்து இறுதி முடிவு எட்டப்படும்" என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes