General25 June 2026

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கிறது: தியாகராஜா நிரோஷ் கண்டனம்

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை மத்திய அரசாங்கத்தின் அதிகார சபைகள் ஊடாக படிப்படியாகப் பறித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சுற்றுச்சூழல் சட்டமூலம் தொடர்பில், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

"தற்போது அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்தச் சுற்றுச்சூழல் சட்டமூலத்தின் மூலம், உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகக்குறைந்த அதிகாரங்களும் மத்திய அரசுக்கு மீண்டும் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக, சுற்றுச்சூழல் விவகாரங்களில் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையானது உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, உள்ளூராட்சி மன்றங்களில் திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கான ஆளணியினரை நியமிக்க அரசாங்கம் அனுமதிப்பதில்லை. கழிவகற்றும் வாகனங்களுக்கான அனுமதி வழங்கல்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களைப் பறிப்பதுடன், மன்றங்களைச் செயலிழக்கச் செய்யும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முற்படுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறான அதிகாரப் பறிப்புச் செயற்பாடுகள் முன்னைய காலப்பகுதிகளில் நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டிருந்தது" என அவர் குற்றம் சாட்டினார்.
Related recommendation
Hiru TV News | Programmes