General19 July 2026

மாத்தறை வெல்லமடம விபத்து: பலி எண்ணிக்கை இரண்டாக அதிகரிப்பு!

மாத்தறை, வெல்லமடம பகுதியில் இன்று (19) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மேலும் ஆறு பேர் மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாத்தறையிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற டிஃபெண்டர் ரக வாகனமும், எதிர்த்திசையில் வந்த சீமெந்து ஏற்றிய பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் டிஃபென்டர் வாகனத்தைச் செலுத்தியதாகக் கருதப்படும் மாத்தறை வெவஹமந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் உதயங்க (37) மற்றும் ஹித்தெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.எம்.வி. சுபாஷ் (36) ஆகிய இருவருமே உயிரிழந்தனர்.

விபத்தின் போது டிஃபென்டர் வாகனத்தில் பயணம் செய்த நான்கு பேரும், பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான டிஃபெண்டர் ரக வாகனம் வாடகை அடிப்படையில் பெறப்பட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், மாத்தறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes