General26 July 2026

பெருந்தொகையான ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனடா நாட்டவர் கைது

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 20 கிலோகிராமிற்கும் அதிகமான 'ஹஷீஷ்' போதைப்பொருளைக் கடத்தி வர முயன்ற 27 வயதுடைய கனடா நாட்டவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையின் பெறுமதி சுமார் 201.89 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஓவியராக பணிபுரியும் குறித்த சந்தேகநபர், கனடாவின் ரொறன்ரோவிலிருந்து கட்டார் நாட்டின் தோஹா வழியாக கட்டார் ஏர்வேஸ் QR662 எனும் வானூர்தி சேவையின் மூலம் இன்று (26) அதிகாலை 2.30 மணியளவில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, பயணப் பொதிகளுக்குள்ளும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 80 பழுப்பு நிறக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.

சோதனையின் முடிவில் இவை அனைத்தும் 'ஹஷீஷ்' போதைப்பொருள் என்பது உறுதி செய்யப்பட்டதுடன், அவற்றின் மொத்த நிறை 20.117 கிலோகிராம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes