General27 July 2026

தெஹிவளை - கல்கிசை துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய உந்துருளி ஓட்டுநர் சிக்கினார்

தெஹிவளை மயானத்தின் காவலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியமை மற்றும் கல்கிசை, டெம்ப்ளர்ஸ் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்த நபர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றமை ஆகிய சம்பவங்களின்போது, துப்பாக்கிதாரி பயணித்த உந்துருளியைச் செலுத்திய நபர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்திடிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 'ஐஸ்' போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 19ஆம் திகதி ஸ்கூட்டர் ரக உந்துருளியில் வந்த இருவர் தெஹிவளை மயானத்தின் காவலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த காவலாளி, 'சாண்டோ' எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரின் தந்தை என விசாரணைகளில் தெரியவந்தது. அத்துடன், திட்டமிடப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'கொஸ்மல்லி' தரப்பினராலேயே இந்தத் துப்பாக்கிச்சூடு வழிநடத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர், துப்பாக்கிச்சூடு நடத்தியவரை ஏற்றிவந்த உந்துருளி ஓட்டுநரை நேற்று (26) கைது செய்தனர்.

கடந்த 21ஆம் திகதி கல்கிசை, டெம்ப்ளர்ஸ் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற சம்பவத்திலும் இவரே உந்துருளியைச் செலுத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, திட்டமிடப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான 'படோவிட்ட அவிஷ்க' என்பவரே தன்னை வழிநடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை ஏற்றிச்செல்வதற்காக 'படோவிட்ட அவிஷ்க' தமக்கு 2 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்கியதாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இரண்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களிலும் தான் உந்துருளியை மட்டுமே செலுத்தியதாகவும், துப்பாக்கிச்சூட்டை இரு வேறு நபர்களே மேற்கொண்டதாகவும் சந்தேகநபர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த 19ஆம் திகதி காலை தொலைபேசியில் அழைத்த 'படோவிட்ட அவிஷ்க', சாண்டோவின் தந்தை மீது துப்பாக்கிச்சூடு நடத்தத் தயாராகுமாறு கூறியதாகவும், அதற்கமைய பெல்லன்வில நடைபாதை பகுதிக்குச் சென்று உந்துருளியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரையும் ஏற்றிச்சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டின் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கிரிவத்துடுவ பகுதியில் இறக்கிவிட்டு, உந்துருளியை கெஸ்பேவ வீதியில் கைவிட்டு வருமாறு தமக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், கடந்த 21ஆம் திகதி இரவு கல்கிசை, டெம்ப்ளர்ஸ் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்த நபரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்துவதற்காக, அதற்குரிய நபரைப் பிள்ளேவ விகாரை பகுதிக்குச் சென்று தாம் அழைத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூட்டின் பின்னர் அவரை பொரலஸ்கமுவ பகுதியில் இறக்கிவிடுமாறு 'படோவிட்ட அவிஷ்க' வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாகத் தம்மை அறிவுறுத்தியதாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களுடன் தொடர்புகொள்வதற்குப் பயன்படுத்தப்பட்ட 3 கைபேசிகள், வழங்கப்பட்ட 2 இலட்சம் ரூபாயில் மீதமான 55,000 ரூபாய் பணம் மற்றும் குற்றச் செயலின்போது அணிந்திருந்த ஆடைகள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பெறப்படவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes