General28 July 2026

மது உற்பத்தி இழப்பு எல்லைக் குறைப்புக்கு மதுபான உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு!

உற்பத்தி மற்றும் சேமிப்பு நடவடிக்கைகளின் போது அனுமதிக்கப்படும் மது ஆவியாதல் இழப்பு எல்லையை 1.5 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதமாகக் குறைக்கும் மதுவரி திணைக்களத்தின் தீர்மானத்துக்கு மதுபான உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட இலக்கம் 991 இன் படி திருத்தப்பட்ட இந்தக் கட்டளையானது, ஆண்டுதோறும் சுமார் 23 பில்லியன் ரூபாய் வரிகளைச் செலுத்தும் முன்னணி மதுபான உற்பத்தியாளர்கள் மேலதிக வரிகளைச் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளும் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பாகக் மதுவரி திணைக்களத்துக்கு எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ள அறிவிப்பில், இந்த புதிய வரம்பு உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதை மேலும் கடினமாக்கும் என நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

உற்பத்தி, சேமிப்பு மற்றும் போத்தல்களில் அடைக்கும் செயல்முறைகளின் போது, குறிப்பாகப் போத்தலில் அடைக்கும் இயந்திரங்களுக்கு மதுபானம் மாற்றப்படும் சந்தர்ப்பங்களில் மது இயற்கையாகவே ஆவியாகிறது எனக் குறிப்பிட்ட உற்பத்தியாளர்கள், திருத்தப்பட்ட இந்த அனுமதி வரம்பு உண்மையான தொழிற்சாலை நிலைமைகளைப் பிரதிபலிக்கவில்லை என வாதிட்டுள்ளனர்.

அத்துடன், முந்தைய 151 ஆம் இலக்க அறிவிப்பின் கீழ் வழங்கப்பட்ட 1.5 சதவீத அனுமதி வரம்பு முறையான அறிவியல் மதிப்பீடு எதுவுமின்றி குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, புதிய வரம்பை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு நடைமுறை சாத்தியமான மற்றும் சான்றுகள் அடிப்படையிலான ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறு அவர்கள் மதுவரி திணைக்களத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மது ஆவியாதல் இழப்பு எல்லை என்று குறிப்பிடப்படும், இயற்கையாகவே காணாமல் போகும் இந்த மதுபான அளவுக்கு உற்பத்தியாளர்கள் வரி செலுத்தத் தேவையில்லை.

எனினும், இந்த வரம்பு 1.5 சதவீதத்திலிருந்து 0.1 சதவீதமாகக் கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளதால் வரம்பு மிகக் குறைவாக உள்ளதால், இயற்கையாக ஆவியாகும் மதுவுக்கும் சேர்த்துத் தாங்கள் தன்விருப்பின்றி மேலதிக வரிகளைச் செலுத்த வேண்டியிருக்கும் என்பது உற்பத்தியாளர்களின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes