International14 August 2026

கீரியும்,பாம்புமாக செயற்படும் விஜய்யும் உதயநிதியும் -விவாதமாகும் மோதல் போக்கு

தற்போதைய தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், முதலமைச்சர் விஜய் அவைக்குள் நுழையும்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து நின்று மரியாதை செலுத்த மறுத்த விவகாரம் அரசியல் தரப்பில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

வழக்கமாக தலைவர்கள் அவைக்குள் வரும்போது எழுந்து நின்று வணக்கம் செலுத்துவது சட்டமன்ற மரபாக இருந்துவரும் நிலையில், உதயநிதியின் செயற்பாடு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிகழ்வு திராவிட முன்னேற்றக்கழகத் தரப்பில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

இதன் நேரடித் தாக்கம் சட்டமன்றக் கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது.

முதலமைச்சர் விஜய் அவைக்குள் வந்தபோது, கே.என்.நேருவைத் தவிர வேறு எந்த திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்கவில்லை.

புன்முறுவலுடன் அவையின் மையப்பகுதி வரை வந்து முதலமைச்சர் வணங்கியபோதும், உதயநிதி ஸ்டாலின் தனது பார்வையைத் தவிர்த்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.

சட்டமன்ற விவாதங்களின் போது முதலமைச்சர் விஜய் "அப்பாவைக் காணோம்" என்று குறிப்பிட்டதும், விவசாய பாதீட்டு விவாதத்தின்போது உதயநிதியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் "ஆவணங்களையும் செய்தித்தாள்களையும் சரியாகப் படித்துப் பார்க்க வேண்டும்" என்று முதலமைச்சர் விஜய் பதிலடி கொடுத்ததும் இரு தரப்புக்கும் இடையேயான பனிப்போரை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

அரசியல் களத்தில் கொள்கை ரீதியான முரண்பாடுகளும் கடுமையான விமர்சனங்களும் இயல்பானவை என்றாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்குள் தனிப்பட்ட வெறுப்பைக் காட்டுவது நாகரிகமான அரசியலுக்கு அழகல்ல என்று சமூக வலைதளங்களிலும் அரசியல் நோக்கர்கள் மத்தியிலும் கருத்துகள் நிலவுகின்றன.

முதலமைச்சர் பதவி என்பது ஒரு தனிநபருக்கோ அல்லது குறிப்பிட்ட கட்சிக்கோ சொந்தமானதல்ல. அது தமிழக மக்களின் ஜனநாயக தீர்ப்பால் உருவான அரசியலமைப்பு பொறுப்பாகும்.

எனவே அந்தப் பதவிக்குத் தர வேண்டிய அடிப்படை மரியாதையைத் தவிர்ப்பது சட்டமன்ற மரபுகளைப் பலவீனப்படுத்தும் என்றும் மூத்த அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிப்பதாக தமிழக ஊடகங்கள் கூறியுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes