General17 August 2026

GSP+ வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்பத்தை மீளாய்வு செய்ய அமைச்சரவை உபக்குழு நியமனம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகை வர்த்தக வசதியைப் பெறுவதற்கான புதிய விண்ணப்பத்தை மீளாய்வு செய்வதற்காக அமைச்சரவை உபக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு அமைச்சு ஆகியன இணைத் தலைமைகளாகக் கொண்டு இந்த உபக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகையைப் பெறுவதற்கு மனித உரிமைகள், தொழிலாளர் தரநிலைகள், சுற்றாடல்/காலநிலை பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி ஆகிய நான்கு முக்கிய வகைகளின் கீழ் 27 சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இலங்கை இணங்க வேண்டியிருந்தது.

இருப்பினும், அடுத்த சுழற்சிக்காக மேலும் 5 மேலதிக உடன்படிக்கைகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள்கள் தொடர்பான ஐ.நா.வின் தனி உடன்படிக்கை, மனோவசியப் பொருட்கள் மீதான உடன்படிக்கை, போதைப்பொருள் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான உடன்படிக்கை, ஊழலுக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கை மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களுக்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கை என்பனவே அவையாகும்.

தற்போதைய திட்டம் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதால், இலங்கை எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

GSP+ சலுகையானது தகுதியுள்ள வளரும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியச் சந்தைக்கு முன்னுரிமையுடன் கூடிய பிரவேசத்தை வழங்குகின்ற போதிலும், சர்வதேச உடன்படிக்கைகளைத் தொடர்ந்து திறம்பட நடைமுறைப்படுத்துவதிலேயே அந்தச் சலுகையின் தொடர்ச்சி தங்கியுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியுள்ள நிலையில், சர்வதேச விதிமுறைகளை இலங்கை பூர்த்தி செய்கிறதா என்பதை ஆய்வு செய்யவே வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைவாக இந்த உபக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் மேலும் 8 அமைச்சுகளின் பிரதிநிதிகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes