General21 August 2026

பகிரங்க மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா - நாடாளுமன்றத்தில் கடைசி உரை எனவும் அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வராமல் தட்டிகழிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வாகி வந்தவர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யத் தவறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இன்று நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய இறுதி உரையின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், 2021 ஆம் ஆண்டில் X-Press Pearl கப்பல் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்ததால் நாட்டின் கடல் சூழலியலுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த நாட்டிற்குச் சட்டப்பூர்வமாகக் கிடைக்க வேண்டிய பில்லியன் கணக்கிலான அமெரிக்க டொலர் இழப்பீட்டுத் தொகை, அதிகாரத் தரப்பினரின் முறையற்ற தலையீடுகள் காரணமாக மிகக் குறைந்த தொகையாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுவே நாடாளுமன்றத்தில் ஆற்றும் கடைசி உரையாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர், சபை நடவடிக்கைகளின் போது அல்லது தமது பேச்சினால் யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் அல்லது அவையின் கண்ணியத்திற்கு ஏதேனும் பங்கம் ஏற்பட்டிருந்தால், அதற்குச் சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவமும் சட்ட நடவடிக்கைக்கான கோரிக்கையும்
கடந்த காலப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மையான குரலாகத் தாம் நாடாளுமன்றத்தில் இயங்குவதாகக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தகுந்த நீதியும் நிவாரணமும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

அத்துடன், நாட்டின் பொருளாதார சீரழிவு மற்றும் சட்ட விரோதச் செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes