General25 August 2026

மெட்ரோ பேருந்துகளை உள்ளடக்கிய பார்க் அண்ட் ரைட் திட்டம் அறிமுகமாகிறது.

கொழும்பில் தற்போதுள்ள 121 மெட்ரோ பேருந்துகளையும் உள்ளடக்கி, எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதியில் இருந்து ஒரு வருட காலத் திட்டத்தின்கீழ் மெட்ரோ பேருந்துச் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

சாதாரண பேருந்துப் பயணிகளைத் தவிர்த்து, தற்போது சிற்றுந்துகள் மற்றும் உந்துருளிகள் போன்ற சொந்த வாகனங்களை பயன்படுத்துபவர்களைப் பொதுப் போக்குவரத்திற்கு மாற ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இதன்படி, கொழும்பு மெட்ரோ பேருந்து திட்டத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 240 பேருந்து நிறுத்தங்களிலும் 'பார்க் அண்ட் ரைட்' முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதன் பின்னர், பயணிகள் தங்களது வாகனங்களை அங்கு நிறுத்திவிட்டு மெட்ரோ பேருந்துகளில் பயணத்தைத் தொடரலாம்.

இதற்கமைய பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் நிறுத்துமிட வசதிகளை ஏற்படுத்துமாறு உள்ளாட்சி அமைப்புகள், வர்த்தகர்கள் மற்றும் காணி உரிமையாளர்களுக்கு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பதிவுசெய்யப்பட்ட நிறுத்துமிடங்கள் மற்றும் அங்குள்ள காலியிடங்களின் விபரங்களை நிகழ்நேரத்தில் காட்டும் செயலி ஒன்றை நகர அபிவிருத்தி அதிகாரி சபை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்தும்.

இதன் மூலம் பயணிகள் வீட்டிலிருந்தபடியே வாகன நிறுத்துமிட முன்பதிவைச் சரிபார்க்க முடியும்.

வாகன நிறுத்துமிடக் கட்டணங்களைச் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் தீர்மானிக்கும் என்றும், இணையவழிச் செலுத்தல் முறைகள் எளிதாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சரவை ஒப்புதலுடன் அடுத்த ஆண்டில் காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கும் மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes