General10 September 2026

4.62 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிலக்கரி எவ்வாறு மாயமானது ? - நாடாளுமன்றத்தில் நாமல் கேள்வி!

சிறைச்சாலையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 நிலக்கரி கப்பல்களிலிருந்து சுமார் 4.62 பில்லியன் ரூபாய் பெறுமதியான 120,000 மெற்றிக்தொன் நிலக்கரி கணக்கின்றி மாயமாகியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (10) உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

குறித்த 19 நிலக்கரி கப்பல்கள் தொடர்பான பதிவுகளில் சுமார் 120,000 மெற்றிக்தொன் பற்றாக்குறை காணப்படுவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

இந்த அளவு நிலக்கரியானது ஏறத்தாழ இரண்டு கப்பல் சுமைக்குச் சமமானது எனக் குறிப்பிட்ட அவர், இவ்வளவு பெரிய அளவு எவ்வாறு மாயமாகியிருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.

"இந்த அறிக்கைகளின்படி, 120,000 மெற்றிக்தொன் காணாமல் போயுள்ளது. இந்த இரண்டு நிலக்கரி கப்பல்களையும் விழுங்கியது யார்?" எனவும் அவர் நாடாளுமன்றத்தில் வினவினார்.

இதன்போது, மின்சார மற்றும் எரிபொருள் விலைகள், வரிகள், பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வாக்குறுதிகள், அரிசி இறக்குமதி மற்றும் கொழும்பு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான முறைகேடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகவும் அரசாங்கத்தை அவர் கடுமையாக விமர்சித்தார்.

அதிகாரத்திற்கு வருவதாகத் தெரிவித்து வழங்கப்பட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியே நாமல் ராஜபக்ச இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes