Sports24 August 2026

ஜெய்ஸ்வால் – அசித பெர்னாண்டோ மோதல்: “ஜெய்ஸ்வால் எல்லை மீறிவிட்டார்” – சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ இடையே மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

கொழும்பு சிங்களே விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஜெய்ஸ்வால் 45 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் அசித பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து பெர்னாண்டோ அவருக்கு விடை கொடுக்கும் வகையில் சைகை செய்ததாகவும், அதற்கு ஜெய்ஸ்வால் பதிலளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இருவரும் நேருக்கு நேர் சென்று வார்த்தை மோதலில் ஈடுபட்டதுடன், உடல் ரீதியான தொடர்பும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சக வீரர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கி சமாதானப்படுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், வார்த்தை மோதல்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம்பெறுவது இயல்பானது என்றாலும், ஜெய்ஸ்வால் பந்துவீச்சாளரை நோக்கி முன்னேறியது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் குறிப்பிட்டார்.

“இந்த சம்பவத்தில் ஜெய்ஸ்வால் நிச்சயமாக எல்லையை மீறிவிட்டார்” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்கிடையில், முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 300 ஓட்டங்களைப் பெற்றது.

தேவ்தத் படிக்கல் 117 ஓட்டங்களை விளாசினார். சுப்மன் கில் 50 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes