புதிய ஆய்வுத் தகவல் நாம் அன்றாடம் செய்யும் உடற்பயிற்சிகளில் சிறிய அளவிலான அதிகரிப்பைக் கொண்டுவருவது கூட, நீண்டகால அடிப்படையில் நமது உடலாரோக்கியத்திற்குப் பெரும் நன்மைகளைத் தரும் என புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச ஊடகம் ஒன்று இந்த ஆய்வுத்தகவலை வெளியிட்டுள்ளது.
உடற்பயிற்சியானது உடலுக்கு மட்டுமன்றி, மூளைச் செயற்பாடு, நினைவாற்றல் மற்றும் பொதுவான உளவியல் நலனுக்கும் சக்திவாய்ந்த பாதுகாப்பை வழங்குகிறது.
எனினும், இதற்காக நாம் மிகக் கடினமான அல்லது தீவிரமான உடற்பயிற்சிகளை மட்டுமே செய்ய வேண்டும் என்பதில்லை என்பதை தற்போதைய ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.
சுறுசுறுப்பான நடைபயிற்சி, ஈருருளி (மிதி வண்டி) ஓட்டுதல் அல்லது படிக்கட்டுகளில் ஏறுதல் போன்ற மிதமான உடற்பயிற்சிகளை தினமும் வெறும் 5 நிமிடங்கள் கூடுதலாகச் செய்வதன் மூலம், உலகளவில் நிகழும் முன் கூட்டிய மரணங்களில் 10-இல் ஒன்றை தடுக்க முடியும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உடற்பயிற்சியே செய்யாமல் முற்றிலும் செயலற்ற நிலையில் இருப்பவர்களுக்கு, இந்த 5 நிமிட கூடுதல் உடற்பயிற்சியானது மிகப்பெரிய ஆரோக்கிய மாற்றத்தையும், அதிக நன்மைகளையும் தரும்.
ஏற்கனவே சுறுசுறுப்பாகவும் உடல்தகுதியுடனும் இருப்பவர்கள் மேலும் 5 நிமிடங்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்யும்போது, அவர்களுக்குக் கிடைக்கும் கூடுதல் நன்மை ஒப்பீட்டளவில் சற்றே குறைவாகவே இருக்கும்.
எனவே, தினமும் 5 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்தால் போதும் என்பது இதன் அர்த்தமல்ல.
மாறாக, எதுவுமே செய்யாமல் இருப்பதற்குப் பதிலாக மிகச் சிறிய அளவில் உடலியல் செயல்பாடுகளை அதிகரிப்பது கூட ஒட்டுமொத்த உடல்நலனில் நேர்மறையான தாக்கம் செலுத்தும் என்பதையே இந்த ஆய்வு உணர்த்துகிறது









