General01 May 2026

பௌத்த பிக்குகளுக்கு வெளிநாடு செல்ல கடும் கட்டுப்பாடு!

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு புதிய கட்டாய நடைமுறைகளை இலங்கை அரசு, அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகள், தத்தமது மூத்த பிக்கு, பிராந்திய பௌத்த தலைவர் மற்றும் அந்தந்த பீடங்களின்; மகாநாயக்க தேரர் ஆகியோரிடமிருந்து பரிந்துரைகளைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் முன்னரே இயற்றப்பட்டிருந்தாலும், தற்போது இது கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் தேரர்களுக்கு இடையிலான சந்திப்பிற்குப் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை மிகவும் அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், மகாநாயக்க தேரர்களுக்கும் இது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன அமைச்சின் அதிகாரிகள், பதிவாளர் பதிவு தேரர்கள் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருக்கு இடையே அவசரக் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.

அதற்கமைய, பௌத்த தற்காலிக கட்டளைச் சட்டத்தின் 41 மற்றும் 42 ஆவது பிரிவுகளுக்கு அமைய, மகாநாயக்க தேரர்கள் தலைமையிலான குழுவுக்கு இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்திலிருந்து அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பிய 22 பௌத்த பிக்குகள், பெருமளவிலான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes