General01 May 2026

தெஹிவளை சிங்கக் குட்டிகளுக்குப் பெயரிட ஒரு அரிய வாய்ப்பு: சிறுவர்களுக்கு அழைப்பு

தெஹிவளை மிருக காட்சி சாலையில் பிறந்த இரண்டு புதிய சிங்கக் குட்டிகளுக்குப் பெயர்களைப் பரிந்துரைக்கும் வாய்ப்பு சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களும் இவற்றைச் சென்று பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண் மற்றும் பெண் சிங்கக் குட்டிகள் கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி பிறந்ததாக விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷ, தெரிவித்தார்.

நான்கு மாதங்களான இந்த சிங்கக் குட்டிகள் தினமும் காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை பொதுமக்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்படும். “இந்த இரண்டு குட்டிகளும் மிகவும் சுறுசுறுப்பாகவும் விளையாட்டாகவும் உள்ளன.

பார்வையாளர்கள் இந்த குறிப்பிட்ட நேரத்தில் அவற்றை அவதானிக்க முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

பெயர் பரிந்துரைக்கும் நிகழ்வு அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகி இரண்டு வாரங்களுக்குத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெயர் சூட்டும் நிகழ்வில் கலந்துகொள்ளும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும் என பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes